Tuesday, January 10, 2012

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

குடாநாட்டில் இருந்து பிற இடங்களுக்கு சென்று வர பாதுகாப்பு கெடு பிடிகள் போக்குவரத்து சிரமங்கள் என்ற கஷ்ரமான சூழ்நிலை முன்னர் இருந்தது. இன்று அவை மறைந்து போக்குவரத்து இலகுவாகியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஏமாற்றுக்காரர்களும் வருகை தந்து குடாநாட்டை கலக்குவது கவலை தருவதாக உள்ளது.
ஜோதிடம் பார்ப்பவர் என்று கூறிக்கொண்டு பெண்மணி ஒருவர் வீடொன்றுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பெண்ணிடம் உனது வீட்டில் பில்லி சூனியம் யாரோ செய்திருக்கிறார்கள் இதை எடுத்தால் தான் உனது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார். அதற்கு ஏற்ற பொருளை வேண்டி பில்லி சூனியம் கலைப்பதாக பல மந்திரங்களை செய்து தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து அந்த தண்ணீரை எல்லோரும் பருக வேண்டும் என்று சொல்லி அவர்களை மயக்கச் செய்து விட்டு வீட்டிலிருக்கும் உடு துணி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து சென்று விட்டார்.
நம்மவர்கள் இந்தியர் என்றால் வாயைப் பிளப்பவர்கள். இதுவே ஏமாற்றுக்காரர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. பலரும் கஷ்ரம் என்று ஜோதிடம் கேட்க போனால் ஏமாற்றம் தான் அடைகிறார்கள். இதனால் உண்மையான ஜோதிட காரருக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்நிலை குடாநாட்டில் பெருகிக் கொண்டு வருகின்றது.
மோசடியில் இது ஒரு வகை என்றால் இராணுவத்தின் பெயரால் கூட மோசடிகள் நடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பிரபல கடை ஒன்றில் ஒருவர் “தான் இராணுவ முகாமில் இருந்து வருவதாகவும், அதிகாரி பொருட்கள் வாங்கி வரச்சொன்னதாகவும் கூறி” பெரிய பட்டியலை வாசித்தான். அவர் கேட்ட பொருட்கள் உடனே “பில்” போடப்பட்டு பார்சல் பண்ணப்பட்டன. சுமார் மூன்று லட்சம் பெறுமதியான பொருட்கள் தயார் நிலையில் இருந்தன. “பெரியதுரை காசு கொண்டு வருவார் சாமான்கள் ஏற்ற லொறியும் வரும்” என்று கொச்சைத்தமிழில் பேசி வீதியை பார்த்தக்கொண்டு நிற்பது போல் நின்றார்.
சுற்று நேரத்தில் ஓரு பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு “இதை நான் சைக்கிளில் கொண்டு போகின்றேன் மிகுதியை ஏற்ற லொறி வரும்” என்று கூறிவிட்டு எடுத்துச் சென்றார். அவர் கொண்டு போன பெட்டியில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் பண்டல் இருந்தது.  இவ்வளவு பெறுமதியான சாமான்களுக்கு “பில்” போடடுப் போகிறார். எப்படியும் அதை ஏற்ற ஆக்கள் வருவார்கள் என நம்பிக்கையோடு வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார் கடைக்காரர். பொழுது சாய்ந்தும் எவரும் வரவில்லை. இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது இன்னும் தான் வரவில்லை. அந்த முதலாளி இராணுவத்தினரிடம் முறைப்பாமு செய்தால் அப்படியான ஓருவர் அந்த முகாமில் இல்லை என்று தெரிந்தது.
இத்தகைய செயலால் பாதுகாப்புப் படையினருக்கு கூட கெட்ட பெயர் வருகிறது. இதற்கு பொலீஸ், இராணுவத்தின் பாதுகாப்பை குறை கூற முடியாது. மக்களே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் கொஞ்சம் அயர்ந்து போனால் தலையில் மிளகாய் அரைத்து விட்டு போய் விடுவார்கள். ஏமாற்றவென்று புறப்பட்டவர்கள் பல உத்திகளை பயன்படுத்துவார்கள். இந்த நேரத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
“வார்த்தையில் அழுத்தமும் வாதத்தில் தெளிவும் தேவை”

ஊடக அறிவை மாணவர்களுக்கு வழங்க பாடசாலைகளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவிப்பு


 மாணவர்களுக்கு ஊடக அறிவை புகட்டுவதற்கு அதிபர்கள் பாடசாலைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ஊடக வளநிலைய மேற்பார்வையாளருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் கல்வி வலயப் பாடசாலை அதிபர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைக் குறிப்பிட்டார். இவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் ஊடகக் கல்வியினை கற்க வேண்டும். வருங்காலம் ஊடகத்திலே தங்கியுள்ளது. அத்துடன்  ஊடகத்துறையில் ஏற்படப் போகும் பாரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஊடக அறிவும், தொடர்பாடல் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டாhர்.

யாழ்ப்பாணத்தில் 56 ஆயிரத்து 870 பேர் மீளக்குடியமர்வுக்காக காத்திருக்கின்றனர்

யாழ் அரச அதிபர் தகவல்


யாழ் மாவட்டத்தில் இன்னும் 56 ஆயிரத்து 870 பேர் மீளக்குடியேற்றத்திற்காக காத்திருப்பதாக யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி மீளாய்வுத்தரவுகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டில் தற்போது மீளக்குடியமர்வுகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 93 குடும்பங்களும், ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் பிரிவில் 11 குடும்பங்களும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 114 குடும்யங்களும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 872 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 648 குடும்பங்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 228 குடும்பங்களும் மீளக்குடியமர்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 660 குடும்பங்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 189 குடும்பங்களும், தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 9 ஆயிரத்து 884 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 464 குடும்பங்களும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 616 குடும்பங்களும் காத்திருக்கின்றனர்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 110 குடும்பங்களும், மருதங்கேணியில் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 606 குடும்பங்களும் என 15 ஆயிரத்து 495 குடும்பங்களும் மீளக் குடியமர்வுக்கு காத்திருக்கின்றனர்.
 

பழங்குடி மக்களின் வரலாற்றுச் சரித்திரம்

இந்தியாவில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியென்னும் பிரதேசத்தில் ஏழு வகையான பழங்குடியினத்தவர்கள்  வாழ்கின்றார்கள். இந்தியாவின் சனத்தொகையில் இவர்களின் பங்கு 8.42 வீதத்தில் உள்ளது.  இங்குள்ள 7 பழங்குடியினத்தவர்களில் குறும்பர், இருளர் என்னும் இரு இனத்தவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பை கடந்த 26.10.2011 அன்று பெற்றுக்கொண்டேன். இதனால் அவர்களின் வாழ்க்கை முறை, உறவு முறை, வழிபாட்டு முறை, இறப்புச்சடங்கு முறை, தொழில் முறை, கல்வி முறை என்பவற்றைத் தெரிந்து கொண்டேன். “இன்றைய செய்தி நாளைய வரலாறு”என்பதற்கிணங்க அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களை தொகுத்து வரலாறாகப் பதிவு செய்கின்றேன்.
ஆன்மா ஒடுங்கும் இடம் தான் ஆலயம் இந்த ஆலயங்களுக்குள்ளே செல்ல இப் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆலயத்தின் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கல்லொன்று நாட்டப்பட்டிருக்கும் இக்கல்லைத் தாண்டி பெண்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது.எமது சமூதாய மரபுகளின் படி எல்லாவற்றிற்கும் மேலாக முதல் நாம் வணங்குவது கடவுளை ஆனால் இவர்களோ தமது மூதாதையரை வணங்கி அவர்களை வழிபட்ட பின் இராண்டாவதாகத் தான் கடவுளை வழிபடுகின்றனர். இவர்களுக்கு மரணம் சம்பவித்தால் எமது முறைகளைப் போல சில இறப்புக் காரியங்களை நிறைவு செய்த பின்னர் அவர்களை அடக்கம் செய்வார்கள்.கிரேக்கத்தில் காணப்பட்டது போன்று இறந்தவர்களை வழிபட்டால் அவர்களின் உடல் பாகங்களை உட்கொண்டால் அதித சக்தி கிடைக்கும் என எண்ணி இறந்தவர்களின் பாகங்களை உண்டனர். அவர்களைப் போல இவர்கள் இல்லா விட்டாலும் அடிப்படைப்பண்பான நம்பிக்கை இறந்தவர்களினால் அதிக சக்தி கிடைக்கிறது என்பதிலிருந்து பிறக்கிறது.
இவர்கள் தமது இனத்தை விட்டு வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்தால் இறுதி வரை ஏற்றுக்கொள்ளாத நிலை இன்றும் உள்ளது. ஏட்டுக்கல்வியறிவில்லா நாட்டுப்புறங்களில் தொன்று தொட்டு வழக்கிலிருந்து வரும் பாடல்கள் நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப்பாடல்கள், பாமர பாடல்கள் என்றொல்லாம் கூறப்படுகின்றது. இறைவனின் எழில் ஓவியங்களாக பரந்து விரிந்து கிடக்கும் கிராமங்களில் வாழும் மக்களையும் அவர்களின் மரபு மொழி நடை, பழக்கவழக்கம், பண்பாடு, நம்பிக்கை, சமய கலாசாரம், தொழில், வேடிக்கை வினோதம், கலை இலக்கியம், பண்பாடுகளை பிரதிபலிக்கும் பிம்பங்களே கிராமியப் பாடல்கள். இத்தகைய பாடல்கள் இருளர், குறும்பர் இனத்தவர்களும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
ஒரு மனிதனினால் மொழியை உருவாக்குவது ஒரு முடியாத காரியம் இன்று அப்படி உருவாக்கினாலும் அதற்கு எழுத்து வடிவம் கொடுப்பது இன்னும் கடினம் குறும்பர், இருளர் ஆகியோருக்கும் ஒரு வகையான மொழியிருந்தாலும் எழுத்து வடிவில் இம் மொழியில்லை. இதனால் காலப்போக்கில் இவர்களது மொழி அழித்து போய்விடுமோ என்பது கேள்விக்குரியவுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் தனித்துவம் மிக்கவர்கள் என்று பல நாடுகளிலும் போற்றப்படும் ஆண் சமூகம் இவர்கள் இடத்தில் இரண்டாவதாகவே பார்க்கப்படுகிறுது.இதனால் தான் பெண்கள் குடும்பத் தலைவியாக இருப்பார்கள். இவர்கள் பெண் வழிச் சமூகம் இதந்தை வழிச் சமூகம் என்று சொல்வதில்லை.பெண்களே நாட்டின் கண் மணிகளாகவுள்ளார்கள் இவர்களிடத்தில்.
இன்று திருமண வயதை அடைத்ததும் பலர் திருமணம் செய்யாத நிலையிலுள்ளார்கள் இதற்கு அடிப்படைக் காரணம் வரதட்சனையாகும். இவ்வரதடசனை வழங்குவதில் எல்லாப் பெற்றோர்களுக்கும் வசதி வாய்ப்புக் கிடையாது இதனால் பிள்ளைகளும் வாழ்க்கைத் துணையில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இவர்களுடைய சமூகத்தில் வரதட்சனையே  மாமியார் கொடுமையோ இல்லை. இனி வரும் காலங்களில் ஆண்களுக்கு திருந்த வழிகாட்டியாக இது போன்ற சமூதாயம் உருவாகலாம்.
இவர்கள் வீட்டிற்கு வருபவர்களை திண்ணையில் வைத்துத் தான் கதைப்பார்கள் உள்ளே விடமாட்டார்கள்.அது யாராக இருந்தாலும் சரி அறைக்குள் அமர விட மாட்டார்கள். இவர்களுடைய தொழில்களாக விறகு பொறுக்குதல், வேட்டையாடுதல், சாணி பொறுக்குதல் என்பனவற்றையே பிரதான தொழில்களாகக் கொண்டிருந்தனர். முன்பு சமூகத்தில் உயர்ந்த நிலையினுள்ளோரின் வீட்டில் வீட்டு வேலைக்காரர்களாக பிரதான தொழிலாக இதனையே செய்தார்கள். இன்று இந் நிலைமாறி வீட்டு வேலைகளைச் செய்வதை பகுதி நேர வேலையாகச் செய்து வருகின்றனர்.
மாறிவரும் காலத்தில் ஏற்ப இந்த பழங்குடியினரும் தம்மை மாற்றியமைக்க முயன்றுள்ளனர்.இதனால் இன்று குறும்பர், இருளர் யாவரும் ஒரளவிற்கு எழுத்தறிவு, வாசிப்பு வீதத்தினைப் பெற்றுள்ளனர். இவர்கள் தமக்கான ஒரு மொழியிருந்தாலும் தமிழையே கதைத்து தேர்ச்சியுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இவர்கள் சமூகத்திலிருந்து வைத்தியர்,சட்டத்தரணி,தாதியர்,ஆசிரியர் பல் துறைகளிலும் உருவெடுக்கின்றனர். காலப்போக்கில் இவர்களின் கல்வி முறையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும்.
இந்தியாவின் சனத்தொகை பெருகிக் கொண்டு வருவதற்கு “குடும்பக் கட்டுப்பாடு முறைமை பின்பற்றப்படாமையே”காரணம் என பல ஆய்வாளர்கள் சுட்டிக் காடடியுள்ளனர்.இக்கட்டுப்பாட்டு முறைமையை கடப்பிடிக்க கல்வியறிவு வீதம் போதியளவு மக்களுக்கு இன்மையால் சனத்தொகைப் பெருக்கத்தில் கவனமின்னையுள்ளது. ஆனால் குறும்பர், இருளர் குடும்பக் கட்டுப்பாட்டு முறைமையை பின்பற்றி வாழ்கின்றார்கள். இதற்கு காரணம் அவர்களின் கல்வியறிவு வீதமே.
முன்பு பழங்குடியினரை அந்த நாட்டுச் சமூகம் தள்ளி வைத்தாலும் இன்று அவர்களின் மகத்துவம் அறிந்து அவர்களுக்கு பல உதவிகளை வழங்குகின்றது.எல்லாவற்றுக்கும் மேலாக ஆரம்பத்திலிருந்து இன்று வரை பழங்குடியினத்தவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் கத்தோலிக்கச் திருச் சபை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Monday, January 9, 2012

வழிகள் மாறிப்போகலாம் ஆனால் மொழிகள் மாறிப்போகலாமா?

ஓவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு வாசம் உள்ளன. அது போல ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புள்ளன. அந்த மொழியின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட மொழி வளம், இனிமை, தெளிவு, கருத்து, உச்சரிப்புத்தன்மையை  என்பன உதவி புரிகின்றது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழிக்கும் வித்தியாசமான சிறப்பியல்புகளை கொடுக்கின்றன. மொழிகள் என்பதற்கு இது தான் என்று சரியாக சுட்டிக்காட்டி வரைவிலக்கணப்படுத்த முடியாது.
இங்கு மொழி பற்றி  எண்ணும் போது இன்னுமொரு முக்கிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது எழுத்து வடிவம், வரி வடிவம் என்பதாகும். எழுத்து வடிவம் என்பது உடலுக்கு குருதி போன்றது. எழுத்து வடிவம் என்பது உண்மையிலேயே ஒரு மொழிக்கு வலுச் சேர்க்கும் வரை படமாகும். மொழி என்பது சத்தம் மற்றும் ஒலியுடன் மட்டுமே தொடர்புபட்டதாகும். காலாதி காலமாக பேசப்பட்டு வரும் வாய் மொழி மரபானது இன்றும் அவை இலக்கியத்தில்  நிலைத்து நிற்பதற்கு வரி வடிவம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்போது வழக்கில் இருக்கும் மொழிகள் மற்றும் வழக்கொழிந்து மறைந்து போன மொழிகள் இன்றோ நேற்றோ நாளையோ தோற்றம் பெற்றதோ, பெறப்போகிறதோ அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படிப்படியாக ஒலைச் சுவடிகள்,கற்கள்  ஈரச்சுதைகள் என்பவற்றில் எழுதி சிறுகச் சிறுக தோற்றம் பெற்றவையாகும். இந்த ஒவ்வொரு மொழியும் அந்தந்த இடத்து மக்களுடைய கலை, கலாசார, பண்பாட்டிக்கு அமையவே தோற்றம் பெற்றவையாகும். அதாவது ஓரு மொழியை வைத்துக் கொண்டு அந்த மொழி பேசும் மக்களின் பொதுவான இனத்திற்குரிய இயல்பு குணாதிசயங்களை கண்டு பிடிக்கலாம்.
“கவிதை எழுதுபவன் எல்லாம் கவிஞன் ஆகிவிட முடியாது” , “சித்திரம் வரைபவன் எல்லாம் சிற்பியாகி விட முடியாது” அது போல உலகில் பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தாலும் துரதிஷ்டவசமாக சில மொழிகளுக்கே எழுத்து வடிவம் இருக்கின்றன. பேச்சு வழக்கில் உள்ள ஒரு மொழியை எழுத்து வழக்கிற்கு மாற்றுவதென்பது சாதாரண விடயமல்ல. இவ்வழக்கில் இருந்து அவற்றை அச்சு வடிவிற்கு கொண்டு வரப்படுமாயின் இன்று பல மொழிகள் அழிந்து போகாமல் இருந்திருக்கும்.
இன்று மனித குலம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு மொழியை புதிதாக கண்டு பிடிப்பது என்பது கல்லில் நார் உரிப்பதற்கு சமனாகும். இன்னும் சொல்லப் போனால் மண்  புதிரை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமனான விடயமாகும். அதாவது மொழி என்பது செயற்கையாகவே அல்லாமல் இயற்கையாகவே தோற்றம் பெற்றதாகும். இதுவும் மொழிக்குரிய சிறப்பம்சமாகும்.
ஓவ்வொரு மனிதனுக்கும் தாய் எவ்வளவு காட்டாயமானதோ அந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தாய் மொழி முக்கியமானது. தாய் இருப்பினும் சுற்றத்தரின் உதவியும் தேவை. அப்படி இருந்தால் தான் சமூகத்தில் மனித குலம் பகுத்தறிவு என்ற நிலைக்கு உருப்பெறும். இது போல தாய் மொழியோடு மட்டும் நில்லாது பிற மொழிகளையும் அறிந்திருத்தல் அப்போது தான் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலும் உண்மையான அறிவைப் பெறமுடியும்.
அழிவதில்லை மொழி இது சிலருக்கு புரிவதில்லை. ஒவ்வொருவரின் தாய் மொழி அப்படியே இருக்கும் அதை பேசுவதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். காரணம் மொழியை யாரும் அழிக்கமுடியாது.
உதாரணமாக, 1) அ(ப்)பி பாசல(ட்)ட யனவா
      2) எத்த கத்தா கரன்ன
      3) ஒபே நம மொக்கத்த(குமக்த)?  
      4) மகே நம……..
      5) தாத்தா கொய் வெலே எய்த?
      6) மம கெதர அட்ட யனவ
      7) லஸ்ஸ, மல்லி, நங்கி ……..
இவையெல்லாம் நாம் பாடசாலையில் கற்றுக்கொண்ட சில சிங்கள வசனங்களாகும்.
ஒரு மொழி செம்மொழியாக வேண்டுமானால் ஆயிரம் ஆண்டுகள் தேவை. ஆனால் எமது தாய் மொழியான தமிழ் மொழி நாலாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. இப்பழைமையை புலப்படுத்த இலக்கிய சான்றாதாரங்கள் உள்ளன. உதாரணமாக திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன உள்ளன. இவற்றோ தமிழ் மொழி எந்த மொழிகளிலிருந்தும் தவுவி வராதா மொழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறந்து சிறந்து கொள்வது யதார்த்தம். ஆனால் சிறந்து பிறந்த மொழி என்றால் அது தமிழ் மொழி ஒன்று தான்.

Tuesday, January 3, 2012

நதியாக ஒட வந்த தே.தேவானந்தின் புதிய கலை வடிவம்

அக்கினிப் பெருமூச்சினூடாக நாடக உலகினிலேயே சுவாசமிட்ட செயல்திறன் அரங்க இயக்குனர் தே. தேவானந்த் அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் பயனாக சென்னைப் பல்கலைக்கழக இதழியல்துறை மற்றும் தொடர்பாடல்துறை மாணவன் ஆடலரசு என்று பலராலும் அழைக்கப்படும் வெங்கடேஸ்வரன் வேணுகோபாலன் அவர்களை வரவழைத்து எமது பாரம்பரிய கலைகளோடு தொடர்புடைய மேலும் புதிய கலை வடிவங்களான சாட்டைக்குச்சியாட்டம், ஒயில் ஆட்டம், தப்பு ஆட்டம், கும்மியாட்டம், ஆதிவாசி நடனம் போன்ற புதிய அடவு முறைகளை 35ற்கும்மேற்பட்ட மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து இம்மாணவர்களைக் கொண்டே இவ் ஆற்றுகைகளை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும், கோப்பாய் கல்வியியற் கல்லூரியிலும், யாழ். பல்கலைக்கழக நுண்கலைக்கழத்திலும் நிகழ்ந்தப்பட்டன.





குறிப்பிட்ட நான்கே நான்கு நாட்களில் ஜந்து ஆட்ட வகைகளை கற்பிப்பது என்பது முடியாத ஒரு காரியம். ஆனால் மனமுண்டால் இடமுண்டு என்பதற்கிணங்க இக்கலைகளிலே மாணவர்களும் பயிற்றுவிப்பாளர்களும்  மனம் வைத்து இக்கலைகளை திறன்பட அளிக்கை செய்தனர். எடுத்துக்காட்டாக ஒரு விவசாயி நெல் மணிகளை அறுவடை செய்த பின்னர் அவற்றை வண்டியிலேயே ஏற்றி செல்வது வழமை. வண்டியிலே பூட்டப்பட்ட மாடுகளை விவசாயி கேட்டிக் கம்பினால் விரட்டி வண்டியினை ஒட்டிச் செல்வான். அந்த விவசாயி  “கெய்யா” “கெய்யா”… என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு அடியை கேட்டிக்கம்பத்தினால் மாட்டுக்கு அடிப்பான். இந்த அடியை பார்த்திருந்த ஒரு சமூகம் இவற்றினை ஓரு கலை வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்து அவற்றுக்கு சாட்டைக்குச்சி என்ற பெயரை வழங்கி ஆற்றுகை செய்து வந்தார்கள் வருகின்றார்கள்.
பறை என்றதும் மறையாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண சமூகம் நடுவே முறையாக இவ் ஆட்டங்களைப் பழக்கி துணிந்தால் தோளில் போடும் துண்டு கூட நமக்குச் சொந்தமில்லை என்ற தாரக மந்திரத்தோடு துணித்தெழுந்து 1000 ற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் சென்றடைய வைத்த பெருமை யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் தே. தேவானந்த் அவர்களையே சாரும்.
உலக அரங்கிலேயே பார்வையாளர்களை அதிகம் கொண்ட அரங்காக கிரேக்க அரங்கு காணப்பட்டது. இதே போன்றே 2011ஆம் ஆண்டு யாழ். குடா நாட்டிலே நாடகம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக பார்வையாளர்களை உள்வாங்கும் திறமையை தே. தேவானந்த் அவர்கள் சுவீகரித்துக் கொண்டார். பார்வையாளர் நடுவே நானும் ஒரு பார்வையாளனாக இக்கலை வடிவத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் அருகிலே இருந்த 65 வயது மதிக்கத்தக்க கலாபூசணம் பத்தினிப்பிள்ளை என்னை மறைத்து எழுந்து நின்று கண் வெட்டாது பார்த்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சட்டென எழுந்த அம்மாவிடம் ஏன் அம்மா இப்படிப் பார்க்கிறீங்க என கேட்ட போது பிள்ளை கதைக்காதை நீ சின்னப்பிள்ளை நான் 65 வயதாகியும் இவ்வாறான கலை வடிவங்களைப் பார்த்ததில்லை இப்பத்தான் பார்க்கிறன் பொறு பொறு பிள்ளை எல்லாம் முடியக் கதைப்பம் எனக் கூறிய அந்த அம்மாவின் உணர்விலிருந்து நான் புரிந்து கொண்டேன் இக் கலை வடிவம் எல்லோரையும் கண்வெட்டாது கவனிக்கச் செய்திருக்கிறது என்று.
நாடகம் என்பது கட்புல செவிப்புல கலை வடிவமாகும். இதனால்தான் சமூகத்திலுள்ள பாத்திரங்களை நாடகம் போலச் செய்கின்றது. இதனால் பல்வேறு நிலையுள்ளவர்களையும் நாடகம் தைத்திருக்கிறது. அந்த வகையில் தே. தேவானந்த் அவர்களின் நெறியாள்கையில் உருவான  “வண்டியும் தொந்தியும்” என்ற நாடகம் நகைச்சுவைப் பாங்கான முறையிலே தயாரிக்கப்பட்டு சிரிப்போடும் சிந்தனையை சீறி விட்டது. இவ் நாடகம் பல வரவேற்பை பெற்றுக்கொண்டது. எடுத்துக்காட்டாக அதிகாரிகளின் பின்னாலே அநீதியான முறையில் அலைந்து திரியும் சில வாலாட்டிகளுக்கும், சமூகத்தின் காவலர்கள் என்று சொல்லப்படும் ஊடகவியலாளர்கள் நடுநிலை தவறி செல்கின்ற போது இவர்களுக்கொல்லாம் சாட்டையடி கொடுப்பது போல் இந்நாடகத்தின் கரு உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வண்டிகளே சற்று சிந்தியுங்கள் தொந்திகளே பின்னால் ஒடாதீர்கள் என்ற உண்மையை புலப்படுத்தி நின்றது இந் நாடகம். நான்கு நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகம் வாயைப்பிளக்கும் அளவுக்கும் குடலை அறுக்கும் வகையிலும் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இங்கே நடிக்கப்பட்ட நான்கு நடிகர்களும் சிறப்பான பாத்திரத் தெரிவிலே நடிக்கப்பட்டதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்நடிகர்கள் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதும் பாராட்டத்தக்கதும். தேய்ந்து போகும் நாடகக் கலையை தீந்து போக விடாது கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் தே. தேவானந்த் அவர்கள் நாடக உலகில் முடிசூடா மன்னர்களில் ஒருவராக திகழ்பவர் என்றால் அது மிகையாகாது.
யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நிலையத்தினதும் செயல்திறன் அரங்க இயக்கத்தின் இயக்குனர் தே. தேவானந்த் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த இவ் ஆற்றுகைகள் இன்றுடன் முற்றும் பெறாமல் எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்தது போன்று பல பாகங்களிலும் இவ் ஆற்றுகை செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும். இவற்றோடு யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்கள் தொடந்தும் இவ் ஆற்றுகைகளை செய்து ஊடகத்தினதும் நாடகத்தினதும் பாரம்பரியங்களை கட்டிக்காக்க வெட்டிப்போட்ட மண்களில் விதையாகுவோம். 


நாடக விறுவிறுப்பின் சுறுசுறுப்பான அனுபவம்

யாழ் செயற்திறன் அரங்க இயக்கத்தின் முன்னெடுப்பில் 02.10.2011 அன்று செயற்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந் தலைமையில் நிகழ்ந்த “நாடக பயிற்சிப் பட்டறை” பேராசிரியர் அ.மங்கை நடாத்தினார்.
இவ் பயிற்சி பட்டறைக்கு “பழம் திண்டு கொட்டையை போடுவது” போல பல நாடக ஆய்வாலர்கள் நடுவே நான் நாடகம் சார்ந்த விடயங்கள் எதுவுமே தெரியாதவளாக இக்களத்திலே நின்றேன். நாடகம் என்றால் என்ன என்று தெரியாத நான் இயக்குனர் தே.தேவானந் அவர்களின் ஆரம்ப பயிற்சி மூலம் “பழக பழக பாலும் புளிக்கும்” போல் எனது நாடக அனுபவமும் எனக்கு கை கொடுத்தது.
சிறுவர் முதல் பெரியோர் வரை விளையாட்டு என்பது யாவர்க்கும் பிடித்த ஒன்று. நான் நினைத்தேன் விளையாட்டை மைதானத்தில் மட்டும் தான் விளையாட முடியும் என்று ஆனால் பேராசிரியர் அ. மங்கை சொன்னார் நாங்கள் எல்லோரும் விளையாடுவோம் வட்டம் கூடுங்கள் என்றார். அப்போது தான் நான் உணர்ந்தேன் நாடகத்திலும் விளையாட்டுகள் இருக்கு என்று. ஆடும் வீடும், சங்கிலி புங்கிலி, கைத்தாளம், நொண்டியோ குதிரையோ ஆகிய பல விளையாட்டின் மூலம் எனக்கு சந்தோசம் கிடைத்தது.


சா+பாடு= சாப்பாடு. சாவின் பக்கம் கொண்டு செல்வது சாப்பாடு. நான் விரதத்தின் மத்தியிலும் இந்த பயிற்சி பட்டறையில் இணைந்து கொண்டேன். ஆனால் எனக்கு நான் விரதத்தில் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு கூட இருக்க வில்லை. அந்தளவுக்கு பேராசிரியர் அ. மங்கையின் நாடக பயிற்சி சிறுபிள்ளைக்கு விளையாட்டு மாதிரி எனக்கு இருந்தது.
விளையாட்டுடன் ஆரம்பமான நாடகப் பயிற்சியில் முகபாவனை உத்தி கையாளப்பட்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனநிலையில் காணப்படுவார்கள். இத்தகைய மன நிலையை அரங்கில் போலச் செய்ய முகபாவனை உதவுகிறது. அதாவது சோகமாக, கோபமாக, விரக்தியாக, மகிழ்ச்சியாக இருந்தால் எப்படி முகத்தை வைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். எனக்கு முதல் தடவையாக அப்படி நடிப்பதற்கு வெட்கமாக இருந்தது. பேராசிரியர் அ.மங்கை அவர்களின் நடிப்பதைப் பார்க்க எனக்கும் அவரைப் போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு நான் வெட்கத்தை விட்டு நடித்தேன். இந்த பயிற்சி மூலம் எனக்கு வெட்கம் என்றால் என்வென்று தெரியாமலே போய் விட்டது. அந்தளவுக்கு செயற்திறன் அரங்க இயக்கம் எனக்கு நாடகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மூன்று நாள் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் நாடகத்தில் ஆர்வமில்லாத எனக்கு முதல் நாள் பயிற்சிப்பட்டறையில் தே.தேவானந் அவர்களின் நகைச்சுவையோடு நடிப்பைக் கண்டு எனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலும் ஏற்பட்டது.
நாடக பயிற்சியின் போது பேராசிரியர் அ.மங்கை சொன்ன உங்களின் வீட்டிலுள்ள பாவணைக்கு பாவிக்கப்படும் ஏதாவது ஒரு பொருளை நாளைக்கு கொன்டு வர சொன்னார். அப்போது அவர் எதற்காக பொருட்களை கொண்டு வரச் சொல்லுறார் என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு விடை அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது.
அடுத்த நாள் நாங்கள் கொண்டு போன பொருட்களை வேறு ஒரு பொருளாக கருதி அதை பயன்படுத்தி நடித்துக் காட்டச் சொன்னார். அன்று தான் எனக்கு தெரிந்தது பொருட்களை வைத்து காட்சிகளை உருவாக்கலாம் என்று. எனக்கோ பொருளை வைத்து எப்படி நாடகம் செய்வது என்று தெரியாது. நான் என்னென்டு செய்யப் போறேன் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசிரியர் அவர்கள் ஒரு பொருளை வைத்து இப்படித் தான் நடிக்க வேண்டும் என்று செய்து காட்டினார். அதற்கு பிறகு எனக்கு பயம் தெளிந்து விட்டது. அன்று எனக்கு மறக்க முடியாத நாள். ஓரு பொருளை வைத்து நாடகம் நடிக்கும் முறைமை எனக்கும் தெரியும் என்ற சந்தோசம் எனக்கும் ஏற்பட்டது.





நாடகத்தில் காட்சியமைப்பு என்பது பிரதான விடயமாகும். இந்த காட்சியமைப்பு ஒவ்வொன்றும் நாடகத்தில் கதை பேசும். அது போல நாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் மூலம் ஒவ்வொரு வகையான காட்சியமைப்புக்களை உருவாக்கினோம். இதற்கமைய இரண்டு சொல்லை வைத்து அவற்றை கருவாக்கி அவற்றை நாடகமாக்கி வெளிப்படுத்தலாம் என்பது நாடகப் பிரியர்கள் தொட்டு எனக்கும் அறியப்படாத ஒரு விடயம். அதாவது “சொல்லட்டோ…….., வேண்டாம்.” என்ற இரண்டு சொற்களை வைத்து எங்களை குழுவாக பிரித்து 5 நிமிடத்திற்குள் நடிகச் சொன்னார். நான் 5ஆவது குழு என்னுடன் 6சக நடிகர்கள் இருந்தார்கள். எங்களுக்கு இந்த இரண்டு சொற்களையும் வைத்து எப்படி நடிப்பது என்று தெரியாது பல கோணத்தில் சிந்தித்து குழம்பிய வண்ணம் இருந்தோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது. முதலாவது குழு தங்களுடைய 5நிமிட ஆற்றுகையை நிகழ்த்தினர். விறுவிறுப்பாக போய் கொன்டிருந்த கள பயிற்சி இடையிலேயே சரிந்து விடுமோ என்று நினைக்கவே 1ஆவது குழு தனது அளிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதை பார்த்தவுடன் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற விடயத்தை புரிந்து கொண்டேன்.
இவ் ஆற்றுகையை கண்டு களித்த யாழ். பல்கலைகழக விரிவுரையாளர் றதிதரன் அவர்கள் “ஒரு பயிற்சிப் பட்டறையிலேயே பங்குபற்றுகின்ற அனைவரும் நடிகர்களாக தொழிற்படுவதில்லை. ஆனால் இங்கு நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையில் பங்கு பற்றிய அனைவருக்கும் நடிகர்களாக தொழிற்பட்டதை இங்கு தான் நான் முதல் முதலாக காண்கிறேன்” என்று றதிதரன் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இப் பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் அன்று குழந்தை ம.சண்முகலிங்கம், யாழ்.பல்கலைகழக நாடக விரிவுரையாளர் றதிதரன், ஈழத்து இசையமைப்பாளர் றோபோட், நெறியாளர் அரசு, யாழ்.பல்கலைகழக நாடக மாணவர்கள், உதயன் செய்தி ஆசிரியர் தே. பிரேம்நாத் மற்றும் நாடக ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரையும் கண்டதே எனக்கு முதல் அனுபவம்.
“உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்கள்” என்பது மகா கவி வில்லியம் சேக்ஸ்பியர் அன்று கூறி விட்ட கூற்றை நான் வீடு சென்று யோசித்துப் பார்த்தேன் அப்போது புரிந்து கொண்டு ஓ ஓகோ…….. அம்மா, அப்பா, கணவன், மனைவி, பிள்ளைகள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்…… ஆகிய எல்லாமே உலக அரங்கில் பாத்திரங்கள் இவை யாவும் நாடகத்தில் போலச் செய்யப்படுகின்றது.
நாளை நான் என்ன பாத்திரம்? ஏன்ற குறிக்கோளை வைத்து வாழ வேண்டும் என்ற தூண்டல், துலங்கல், விளைவு காட்டிகள் ஆகியவற்றை இப் பயிற்சிப்பட்டறையில் அனுபவமாக கிடைத்தது. வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை இப் பூமியில் என்ற தாரக மந்திர அனுபவத்தோடு  செயற்திறன் அரங்க இயக்குணரும் யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குணருக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன் என் அனுபவத்திற்காய்.